பதிவு செய்த நாள்
08
மார்
2024
03:03
திருப்புவனம்; பஞ்ச பூதங்களான நீர், நிலம், வான், நெருப்பு, காற்று ஆகியவற்றை பாதுகாக்க வலியுறுத்தி இளம்பெண் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் ராமேஸ்வரத்திற்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷிப்ரா பதக் , இளம்பெண் துறவியான இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர், பஞ்ச பூதங்களை பாதுகாக்க வேண்டும், அடுத்த உலக போர் தண்ணீருக்காகத் தான் நடைபெறும் என்றும் எனவே அவற்றை பாதுகாக்க வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் மாதம் ஷிப்ரா பதக் இவரது தந்தை, சகோதரர் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழுவினர் பாதயாத்திரையாக அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரை நான்காயிரம் கி.மீ., தூரம் கிளம்பியுள்ளனர். சட்டீஸ்கரின் அடர்ந்த காடுகளை நடந்தே கடந்த இக்குழு மகராஷ்டிரா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்துள்ளது. பயணத்தின் இறுதி கட்டத்தை நெருங்கிய இவர்கள் நேற்று ராமேஸ்வரம் செல்லும் வழியில் திருப்புவனத்தை வந்தடைந்தனர். அவர்களுக்கு பொதுமக்கள் திரளாக வந்திருந்து வரவேற்பு அளித்தனர்.
ஷிப்ரா பதக் கூறுகையில் : காஷ்மீரையும், கன்னியாகுமரியையும் இணைப்பது இந்திய கலாச்சாரம் தான், நாங்கள் ராம் ஜானகி வான் கமன் பத் யாத்திரை என்ற பெயரில் பஞ்ச பூதங்களை பாதுகாக்க நடைபயணம் மேற்கொண்டு இறுதியாக ராமேஸ்வரத்தில் நிறைவு செய்ய உள்ளோம், வழிநெடுக பத்து லட்சம் மர கன்றுகள் வரை நடவு செய்துள்ளோம், நதிகளை இணைத்தால் விவசாயம் பெருகும், எனவே நதிகள் இணைப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ராமர் சீதையை காக்க ராமேஸ்வரம் வழியாக அணில், அனுமார் உடன் பாலம் அமைத்தார் எனவே இந்த வழியாக செல்வதில் பெருமை கொள்கிறோம், என்றார். இரவில் மட்டுமே பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை எடுத்து கொள்கின்றனர். பகல் முழுவதும் தண்ணீரை அருந்தியே நடைபயணம் மேற்கொள்கின்றனர். இளம் பெண் துறவி நடைபயணம் மேற்கொண்டதை அறிந்து பொதுமக்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து தண்ணீர் வழங்கினர்.