ஆயிரம் ஆண்டுகள் பழமையான, மேற்றழை தஞ்சாவூர் என்று அழைக்கப்படும், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பதவிக்காலம் முடிந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் அறங்காவலர்களாக, ராமசாமி, மோளபாளையம் நடராஜன், குமாரபாளையம் ஆறுமுகம், குப்பேபாளையம் யசோதா, கவுண்டம்பாளையம் சங்கர் ஆகிய ஐந்து பேர் நியமிக்கப்படுகின்றனர், என தெரிவித்துள்ளார். இதையடுத்து அறங்காவலர்கள் நேற்று மாலை மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உதவி ஆணையர் (பொறுப்பு) மேனகா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நடராஜன் அறங்காவலர் குழுத் தலைவராக ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் லோகநாதன், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 11 ஆண்டுகளுக்குப் பிறகு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.