முடிதிருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை; பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மார் 2024 07:03
மயிலாடுதுறை; முடிதிருச்சம்பள்ளி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானக் கொள்ளை திருவிழாவில் சுடுகாட்டில் கிழங்கு படையலை பேச்சாயி வேடமணிந்த பக்தர்கள் கிழங்கை கொள்ளையிடும் நிகழ்ச்சி- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து கிழங்கை பெற்று சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் நடைபெறும் மயான கொள்ளை திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோவில் பரம்பரை அறங்காவலர் பிரகாஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கு விசேஷ சந்தன அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.இதனை முன்னிட்டு ஆலயத்தில் ஏராளமான பெண்கள் மாவிளக்கிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் அங்காளம்மன் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு (சுடுகாடு) மயானத்தை அடைந்தது. அங்கு விரதம் இருந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கிழங்கு வகைகள், நவதானிய வகைகள் வைக்கப்பட்டிருந்தன. சுவாமி தீபாரதனைக்கு பிறகு பேச்சாயி வேடமணிந்திருந்த பக்தர்கள், சிறுவர்கள் கிழங்கை கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் உண்ணுவதால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும், நோய்கள் அனைத்தும் தீரும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரம் கிடைக்கும் என்பது ஐதீகம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு கிழங்கு வகைகளை எடுத்துச் சென்று ஆலயத்தில் அம்மனை தரிசித்து கிழங்கை உண்டு வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. மீனா நேரில் வந்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.