பதிவு செய்த நாள்
11
மார்
2024
03:03
மேட்டுப்பாளையம்; தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலில் சுற்று மண்டபம், நடைபாதை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்பணிகளை 6 முதல் 9 மாதங்களுக்குள் முடிக்க கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் பக்தர்கள் பக்தியுடன் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து கோவிலை சுற்றி வந்தும், பவானி ஆற்றுக்கு சென்றும் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோவிலை சுற்றி சுற்று மண்டபம், பவானி ஆற்றுக்கு செல்லும் நடைபாதை மண்டபம், கூடுதல் முடி காணிக்கை அறை, பாலூட்டும் அறை, பவானி ஆற்றில் கூடுதல் படித்துறை, பெண்கள் உடை மாற்றும் அறை என பல்வேறு பணிகள் ரூ.14.50 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் கைலாச மூர்த்தி கூறுகையில், வனபத்ரகாளியம்மன் கோவில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 6 முதல் 9 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றார்.