பங்குனி மாத பூஜை, உத்திர திருவிழா ; சபரிமலை நடை இன்று மாலை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மார் 2024 08:03
சபரிமலை; பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கிறது.25 -ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.
இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை காலை முதல் பங்குனி மாத பூஜைகள் தொடங்கும். பங்குனி உத்திர திருவிழா 16 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 8:20 முதல் 9:00 மணிக்குள் தந்திரி மகேஷ் மோகனரரு கொடியேற்றுவார். தொடர்ந்து 17 முதல் 24 வரை தினமும் மதியம் உற்சவ பலி நடைபெறும். 20 முதல் 24 வரை இரவு 9:00 மணிக்கு யானை மீது சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். 24 நள்ளிரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 25 காலை 11:30 மணிக்கு பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி சன்னிதானம் திரும்பியதும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நடைபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.