கண்டவராயன்பட்டி; திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடியில் சாம்பிராணி வாசகர் கருப்பர் கோயில் திருவிழா இரண்டாம் நாளில் பரவலாக நடந்த அன்னதான பூஜைகளில் திரளாக கிராமத்தினர் பங்கேற்றனர்.
இக்கோயிலில் மாசி சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்கள் திருவிழா நடைபெறும். மார்ச் 5 ல் அதிகாலையில் பூசகர்களால் கருப்பருக்கு சிறப்பு வழிபாடு நடந்து காப்புக் கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து மறுநாள் கப்பரையை முன்னிட்டு அரிவாளில் சாமியாட்டம் நடந்தது.தொடர்ந்து மார்ச் 8ல் சிவராத்திரி சிறப்பு பூஜைகளும், மார்ச் 10ல் பாரிவேட்டையன்று அரிவாளில் சாமியாட்டமும் நடந்தது. பின்னர் மார்ச் 12 ல் முதல் நாள் திருவிழாவும், நேற்று இரண்டாம் நாள் விழாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவே சாமியாடிகள் பல கிராமங்களிலிருந்து கோயிலுக்கு வந்து தங்கினர். நேற்று அதிகாலை முதல் கிராமத்தினர் சாமியாடிகளுடன் வந்து அன்னதான பூஜை நடத்தி பக்தர்களுக்கு அன்னதானம் செய்தனர். சாம்பிராணி புகைத்தும், கரும்பு படைத்தும், கரும்பு தொட்டில் நேர்த்திக் கடன் நிறைவேற்றியும் கருப்பரை வழிபட்டனர். கருப்பரின் பிரதிநிதியாக புரவிக்கு நீண்ட மாலைகளை அணிவித்தனர். உறங்கா புளி மரத்திற்கு அரிவாள் வழங்கினர். மூன்றாம் திருநாளில் கருப்பம்பட்டியிலிரந்து தீர்த்தம் எடுத்து சாமியாட்டமுமு், ஊர் மந்தையில் சாமியாட்டமும் நடந்து மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவடையும்.