மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 02:04
கூடலுார்; மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடியில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
தமிழக கேரள எல்லை கூடலுார் விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் தமிழக வனப்பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படும். தமிழக, கேரளா பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு ஏப். 23ல் நடைபெற உள்ள விழாவிற்கு தேனி மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. விழா தொடர்பாக தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர் தலைமையான ஆலோசனைக் கூட்டம் நாளை (ஏப்.13) தேக்கடியில் நடைபெறுகிறது. இந்நிலையில் விழாவிற்கான கொடியேற்றம் இன்று கோயில் அடிவாரம் பளியன்குடியில் நடந்தது. மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெண் தெய்வத்தின் வழிபாட்டின் முன்னோடியாக கன்னிமார்கள் எனும் குழந்தைகளுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் காப்புக் கட்டி விரதத்தை துவக்கினர். கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன், கவுரவத் தலைவர்கள் ஜெயபாண்டியன், நேரு, பளியர் இன தலைவர் மனோகரன், கேரள கண்ணகி அறக்கட்டளை தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.