பதிவு செய்த நாள்
12
ஏப்
2024
04:04
பரமக்குடி; பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமக்குடி பெரிய பஜார் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மதுரை சித்திரை திருவிழாவுக்கு இணையாக விழா நடப்பது வழக்கம். இதன்படி இன்று காலை 10:00 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் சிவாச்சாரியார்கள் நந்தி கொடியை ஏற்றினர். பின்னர் மாலை பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் வீதி வலம் வந்தனர். தினமும் சுவாமி அம்மன் தனித்தனியாக கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, ரிஷபம், நந்திகேஸ்வரர், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் வலம் வருவர். ஏப்.,18 காலை நடராஜர் புறப்பாடு, மறுநாள் பிச்சாண்டவர் புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளுவார். ஏப்.,20 இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர்வரிசை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,21 மாலை 5:00 மணிக்கு மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது. அன்று இரவு யானை மற்றும் பூ பல்லக்கில் பட்டண பிரவேசம் நடக்கும். மறுநாள் காலை 9.30 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் விமரிசையாக நடக்க உள்ளது. ஏப்.,23 கொடி இறக்கமும், மறுநாள் உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பரம்பரை டிரஷ்டிகள், ஆயிரவைசிய சபையினர் செய்கின்றனர்.