புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2024 04:04
பாலக்காடு; புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காடு நகர் அருகே உள்ளது பிரசித்தி பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா ஆண்டும் பங்குனி மாதம் கூத்தபிஷேகம்-தாலப்பொலி என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழாவிற்கு பங்குனி மாத முதல் வெள்ளிக்கிழமை அண்டலாடி உண்ணி நம்பூதிரிப்பாடின் தலைமையில் கொடி ஏறின. ஒரு மாதம் நீளும் கலை நிகழ்ச்சிகளின் முடிவில் இன்று காலை கோவில் நடை திறந்ததும் திருவிழா ஆரம்பித்தன. காலை ஐந்து மணிக்கு கணபதி ஹோமத்துடன் சடங்குகள் தொடங்கின. 7.30க்கு கலசாபிஷேகம், பந்தீரடிபூஜை, கொட்டிப்பாடி சேவை ஆகியவை நடந்தன. தொடர்ந்து கரியன்னூர் நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட பஞ்ச வாத்தியம் முழங்க 11 யானைகள் அணிவகுப்புடன் "காழ்ச்ச சீவேலி என்ற நிகழ்வு நடந்தது. 12.30க்கு உச்ச பூஜை, அவியிடல் பூஜை ஆகியவை நடந்தன. மாலை 4.30க்கு பஞ்ச வாத்தியம் முழங்க யானைகள் அணிவகுப்புடன் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து ஆடை ஆபரணங்கள் அணிந்த யானைகள் அணிவகுத்து நின்று உள்ள முத்து மணி குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதை கண்டு மகிழ்ந்தனர். இதனுடன் நடந்த காவடியாட்டம் மற்றும் பேண்ட் மேளம் நிகழ்ச்சியை மேலும் பொலிவு பரப்பியது. 7.30 க்கு செறுச்சேரி குட்டன் மாரார் தலைமையிலான வாத்திய கலைஞர்களின் "பாண்டி மேளம் என்று அழைக்கும் செண்டை மேளம் நடக்கிறது. தொடர்ந்து ஆத்தாழ பூஜை, "கூத்துமாட நுழைவு ஆகியவை நடந்தது. நாளை காலை நடக்கும் சிறப்பு பூஜைகளுடன் விழா நிறைவு பெறும்.