சின்னமனூர் சிவகாமியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது எப்போது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 03:04
சின்னமனுார்; சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் திருப்பணி வேலைகள் முடிந்து விட்டதென கூறியுள்ள நிலையில் கும்பாபிஷேகம் ஏன் நடத்தவில்லை என்பது தெரியவில்லை . உடனே கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
சின்னமனூர் பூலாந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் வரலாற்று சிறப்பு பெற்றதாகும். பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளினார் என்பது சிறப்பாகும். இந்த கோயில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் கடந்த 2007 ல் நடைபெற்றது. அதற்கு பின் நடைபெறவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகமவிதி. ஆனால் 15 ஆண்டுகளை கடந்தும் நடைபெறவில்லை. கடந்த 2022 ல் அதற்கான பணிகள் இந்த ஊரை - சேர்ந்த முக்கிய பிரமுகர்களை உபயதாரர்களாக கொண்டு துவங்கியது. பணிகள் விறுவிறுப்பாக நடந்து ஏறத்தாழ பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதாக கூறினார்கள் ஆனால் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தவில்லை. ஆனால் என்ன காரணத்திற்காக கும்பாபிஷேகம் நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர் என பொதுமக்களும், இறையன்பர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடைபெற்றுள்ள திருப்பணிகள் தொல்லியல்துறை வழிகாட்டுதல்கள்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளின் போது பூலாநந்தீஸ்வரர் கோயில் சுற்றுச்சுவரில் உள்ள புராதன சிற்பங்கள், கல்வெட்டுகள் சேதப்படுத்தப்பட்டதாக கடந்த 6 மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. ஹிந்து முன்னணியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர். ஆனால் ஹிந்து சமய அறநிலைய துறை இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தது. தொல்லியல்துறையின் வழிகாட்டுதல்படிதான் பணிகள் நடைபெற்று வருவதாக கூறியது. திருப்பணிகள் செய்து வரும் உபயதாரர்கள் பெரும்பாலும் பணியை நிறைவு செய்துள்ளனர். ஆனால் கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலைய துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறது உடனடியாக கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி வருகிறது.