பதிவு செய்த நாள்
13
மே
2024
01:05
திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி(ஈஸ்வரன்), ஸ்ரீவீரராகவப்பெருமாள்(பெருமாள்) கோவில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு, 17 ம் தேதி முதல், 28 வரை, கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் மேடை அமைத்து, தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்; கலை நிகழ்ச்சி நிறைவாக, கிளாசிக் போலோ நிறுவனம் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
தினமும் மாலை 5:30 மணிக்கு, ஏ.கே.ஆர்., பள்ளி குழந்தைகளின் வரவேற்பு கலை நிகழ்ச்சிகளும், மாலை, 6:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. வரும், 17ம் தேதி நாதஸ்வரம், தவில் கலைஞர்களின் மங்கள இசை நிகழ்ச்சி; 18ல் கடம் சுகன்யா குழுவினரின், கடம், வயலின், வீணை, மோர்சிங், மிருதங்கம் என, மகளிர் இன்னிசை நிகழ்ச்சி. வரும் 19ல், சாய் கிருஷ்ணா நுண்கலைக்கூடத்தில் சர்வம் கிருஷ்ணமஸ்து நடன நிகழ்ச்சி; 20ம் தேதி திருப்பூர் ஸ்வரவாணி கலாலய குழுவின் திவ்ய நாம சங்கீர்த்தன இசை நிகழ்ச்சி; 21 ம் தேதி சுதித்ரா குழுவினரின் பக்தி அமுதம் நிகழ்ச்சி; 22ம் தேதி நாகை முகுந்தனின் தெய்வத்தின் தெய்வம் ஆன்மிக சொற்பொழிவு. தொடர்ந்து, 23ம் தேதி, டிரீம் லேண்ட் டான்ஸ் ஸ்டுடியோ குழுவினரின், பரதநாட்டிய நிகழ்ச்சி; 24 ம் தேதி கவிநயா நாட்டியாலயா பரத நாட்டிய பள்ளியினரின், தசாவதாரம் சொல்லும் கதையும், காவியமும் நாட்டி நிகழ்ச்சி; 25ம் தேதி, வீரமணி ராஜூ, அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல் நிகழ்ச்சி; 26ம் தேதி, லீலா சாம்பன் மற்றும் ஸ்பாண்ட டான்ஸ் கம்பெனியின் பரதநாட்டிய நிகழ்ச்சி. வரும் 27ம் தேதி, கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் நடுவராக கொண்டு, கம்பன் காவியத்தில் அனுமனின் புகழுக்கு பெரிதும் காரணம் பக்தி பரவசமே... தொண்டின் சிறப்பே என்ற பட்டிமன்றம் நடக்கிறது. நிறைவாக, 28 ம் தேதி திருப்பூர் ரஜினி செந்திலின், மேஸ்ட்ரோ இசைவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அறங்காவலர் குழு, கோவில் நிர்வாகம், ஸ்ரீவாரி டிரஸ்ட், திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீஆதீஸ்வர் டிரஸ்ட், சேக்கிழார் புனிதர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர், தேர்த்திருவிழா கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
சிவனடியார்கள் உழவாரப்பணி; திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று உழவாரப்பணி நடந்தது. பெண்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், காலை, 9:00க்கு துவங்கி, மாலை, 4:00 மணி வரை, உழவாரப்பணி மேற்கொண்டனர். கருவறை, அர்த்த மண்டபம் தவிர்த்து, மேற்கூரை பகுதி உட்பட கோவில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்தனர். நவீன கருவிகளை கொண்டு, தண்ணீரை பீய்ச்சியடித்து, துாண்கள், கோபுரம், சுவர்களை சுத்தம் செய்தனர். இதன்காரணமாக, நேற்று காலை நேர சுவாமி தரிசனம் தடை செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள், மாலையில் நடை திறந்த பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில், சிவனடியார் திருக்கூட்டத்தினர், உழவாரப்பணிகள் மேற்கொண்டனர்.