மங்கல இசை கற்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்; குருகுல முறைப்படி கலைஞர்களை உருவாக்கும் கோவிலூர் மடாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2024 03:05
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள கோவிலூரில் நாதஸ்வரம், தவில் கற்பதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் குருகுல முறைப்படி மடாலயத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கோயில் நிகழ்ச்சிகளோ, திருமணமோ, எந்த மங்கள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அங்கு முக்கிய பங்கு வகிப்பது மங்கள வாத்திய இசைக்கருவிகளான நாதஸ்வரமும் தவிலும் தான். இன்று எத்தனையோ இசைக்கருவிகள் வந்தாலும் மங்கள வாத்திய இசைக்கருவிகளுக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. அதனை அறிந்தே அழிந்து வரும் இந்த மங்கள வாத்திய இசைக்கருவிகளை இளைஞர்கள் பலரும் ஆர்வமுடன் கற்கத் தொடங்கியுள்ளனர். அதனை கருத்தில் கொண்டு காரைக்குடி அருகேயுள்ள கோவிலூர் மடாலயத்தில், ஞானதேசிக சுவாமிகளால் குருகுல முறைப்படி மங்கள வாத்திய இசைப்பள்ளி உருவாக்கப்பட்டது. தொடந்து நாச்சியப்ப சுவாமிகள், மெய்யப்ப சுவாமிகள் தொடங்கி, தற்போது நாராயண சுவாமிகளால் வழிநடத்தப்பட்டு வருகிறது. மதம் இனத்திற்கு அப்பாற்பட்டு 45 வயது வரை உள்ள ஆண் பெண் அனைவருக்கும் மங்கள இசை வாத்தியமான நாதஸ்வரம், தவில் வாசிப்பு கற்றுத் தரப்படுகிறது. இதனை சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை திருநெல்வேலி விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகின்றார். குருகுல முறைப்படி தங்கும் வசதி உணவுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.
இசை ஆசிரியர்கள் வேதமுத்து மற்றும் டி.கே. கணேசன் கூறுகையில்; கோவில்கள் திருமணம் உள்ளிட்ட மங்களகரமான நிகழ்ச்சிகளில் வாசிக்க இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று ஆண்டு பயிற்சி காலமாகும். ஆனால் கற்பதற்கு காலமில்லை. அவரவர் திறமைதான். குருகுல முறைப்படி தங்கும் வசதி உணவு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது மங்கல இசை வாத்திய வாசிப்பு குறைந்து வரும் நிலையில் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கற்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயிற்சி பெற்ற நிலையில் தற்போது அனைத்து ஜாதி மதத்தினரும், இசைஞானம் உள்ள அனைவரும் பயிற்சி பெற முன் வருகின்றனர். இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள், இந்தியாவில் மட்டுமின்றி வெளி நாடுகள் வரை தங்களது இசையை இசைத்து புகழ் பரப்பி வருகின்றனர்.