பதிவு செய்த நாள்
20
மே
2024
03:05
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், நேற்று வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.
கோவை மாவட்டத்தில், காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ தளமாகும். நேற்று வைகாசி மாத சுக்ல பட்ச ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறந்து, மூலவர் அரங்கநாதர் பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷ்வக் சேனர், ஆராதனம், புண்யாவதனம், கலச ஆவாகனம் ஆகிய வைபவங்கள் நடைபெற்றன. ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாளுக்கு, ஸ்தபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. தேன், நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் சிறப்பு கலச தீர்த்தத்துடன் திருமஞ்சனம் நடந்தது. பின்பு அரங்கநாத பெருமாள் வெண்பட்டு குடை சூழ, மேள, தாளம் முழங்க வெள்ளி சிம்மாசனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து உச்சக்கால பூஜை, சாற்றுமுறை வைபவம் நடந்தது. இதில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், மிராஸ்தரர்கள், கோவில் செயல் அலுவலர், பணியாளர்கள், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.