பதிவு செய்த நாள்
24
மே
2024
11:05
சேலம்: ’கோவிந்தா’ கோஷத்துடன், பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. வைகாசி அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. காலை, 5:45 மணிக்கு அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமி சிலை, தேர்வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேருக்கு, ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. 6:00 மணிக்கு, தேரில் சுவாமி எழுந்தருளினார். சிறப்பு பூஜை செய்து, தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், ’கோவிந்தா’ கோஷத்துடன், வடம் பிடித்து இழுத்து, இரண்டாவது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், முதல் அக்ரஹாரம் வழியாக, தேர்வீதியை அடைந்தது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர். நாளை காலை தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.