பதிவு செய்த நாள்
24
மே
2024
11:05
தஞ்சாவூர்; தஞ்சாவூரை அடுத்த கரந்தையில், பெரியநாயகி அம்பாள் சமேத கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோவில் தேவாரப் பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரிய கோவில் கட்டப்படுவதற்கு முன்பே ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் இக்கோவிலில் திருப்பணிகள் செய்து உள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டதும்,கரிகால் சோழ மன்னனுக்கு அருள்பாலித்து ஸ்ரீ வசிஷ்ட மகா முனிவரால் பூஜிக்கப்பட்ட தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா முன்னிட்டு ஏழூர் பல்லாக்கு திருவிழா கடந்த 9ம் தேதி, ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் திருக்கல்யாணத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 13ம் தேதி கொடியேற்றப்பட்டு தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று (மே 24 ) காலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லாக்கில் ஸ்ரீ சோமாஸ்கந்தர், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ கந்தர் மற்றும் ஸ்ரீ தனி அம்மன் சுவாமிகள் பல்லாக்கில் எழுந்தருளினர். அதைபோல, வெட்டிவேர் பல்லாக்கில் ஸ்ரீ வசிஷ்டர், ஸ்ரீ அருந்ததி அம்மன் சுவாமிகள் எழுந்தருளினர். இதனையடுத்து சுவாமிகளுக்கு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.
சிவகணங்கள் மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் கண்ணாடி பல்லாக்கு மற்றும் வெட்டிவேர் பல்லாக்கினை தோளில் சுமந்தபடி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தனர். பின்னர் பல்லாக்குகள் ஏழூர் சப்தஸ்தான ஸ்தலங்களான வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் (கரந்தை), தஞ்சைபுரீஸ்வரர் திருக்கோவில் (வெண்ணாற்றங்கரை), வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் ( திருதென்குடி திட்டை), சொக்கநாதர் திருக்கோவில் ( கூடலூர்), ராஜராஜேஸ்வரர் திருக்கோவில் (கடகடப்பை), கைலாசநாதர் திருக்கோவில் (திருப்புன்னைநல்லூர்), பூமாலை வைத்தியநாதர் திருக்கோவில் (கீழவாசல்) ஆகிய ஏழு ஊர்களுக்கும் சுவாமி புறப்பட்டு சென்றன. ஏழூர் புறப்பாடு முடிந்ததும் நாளை (25ம் தேதி) சுவாமி கோவிலுக்கு வந்தடைந்ததும் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும். இவ்விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.