பதிவு செய்த நாள்
08
ஜூன்
2024
08:06
சோளிங்கர்; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, மார்ச் 8ல், 20 கோடி ரூபாய் மதிப்பில் பக்தர்கள் பங்களிப்புடன் ரோப்கார் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த ரோப்கார் சேவை வாயிலாக, தினசரி ஆயிரம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வரும் இந்த ரோப்கார் சேவை, 5 மற்றும் 6ம் தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மீண்டும் வழக்கம் போல் இயங்கியது. காலை 8:00 மணி முதல் ரோப்கார் வளாகத்தில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட பின் பக்தர்கள் ரோப்காரில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆண்டாள் நாச்சியார் உற்சவம்: lராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மரின் உற்சவ மூர்த்தியான பக்தோசித பெருமாள்கோவில் சோளிங்கர் நகரில் அமைந்துள்ளது. கொண்டபாளையம் மலையடிவாரத்தில் பிரம்மதீர்த்தம் எனப்படும் தக்கான்குளம் உள்ளது. தக்கான் குளக்கரையில், வரதராஜபெருமாள் அருள்பாலிக்கிறார். கோவில் நகரமான சோளிங்கருக்கு திரளான பக்தர்கள் தினசரி வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். வைகாசி வெள்ளிக்கிழமையான நேற்று மாலை பக்தோசித பெருமாள் கோவில் ஆண்டாள் நாச்சியார் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆண்டாள் நாச்சியார் உள்புறப்பாடு எழுந்தருளினார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.