பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
11:06
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஒன்றியம், முருங்கை ஊராட்சிக்குட்பட்ட அல்லுார் கிராமத்தில், சிறிய அளவில் இருந்த தேவி, பூதேவி உடனுறை வரம் தரும் வரதராஜ பெருமாள் கோவில், தற்போது புதிதாக பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டு, பல்வேறு திருப்பணிகளுடன் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 13ல் விசேஷ ஆராதனை, பகவத் அனுக்ஞை, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட முதல் கால யாக சாலை பூஜைகள் துவங்கின. நேற்று முன்தினம் பிம்பசுத்தி, திருமஞ்சனம், பெருமாள் தாயார் கண் திறப்பு நடந்தது. மாலையில், மூன்றாம் கால ஹோமம், பூர்ணாஹுதி, நரசிம்மர் ஹோமம் நடந்தன. கும்பாபிஷேக தினமான நேற்று, விஸ்வரூபம், கும்ப ஆராதனம், நான்காம் கால ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, கும்பம் புறப்பட்டு, அதிர்வேட்டுகள் முழங்க, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள் கோவில் விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, மஹா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்து. விழாவில், அல்லுார், முருங்கை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை 2:00 மணிக்கு தேவி, பூதேவி – வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. இரவு மலர் அலங்காரத்துடன், சுவாமி வீதி உலா நடந்தது.
பஞ்சாயுதேஸ்வரர்: சித்தாமூர் அருகே முகுந்தகிரி கிராமத்தில், பஞ்சாயுதேஸ்வரி உடனுறை பஞ்சாயுதேஸ்வரர் திருக்கோவிலில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், 14ம் தேதி துவங்கின. இதையடுத்து, நேற்று காலை 10:15 மணிக்கு, பஞ்சாயுதேஸ்வரர் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:25 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின், பஞ்சாயுதேஸ்வரருக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காட்டப்பட்டது.
ஓசூரம்மன் கோவில்: திருக்கழுக்குன்றம் பரமசிவம் நகரில், பழமையான ஓசூரம்மன் கோவில் உள்ளது. அதன் மஹாகும்பாபிஷேகம் நடந்து, 12 ஆண்டுகள் கடந்த நிலையில், சன்னிதி கோபுரம், மஹா மண்டபம் உள்ளிட்டவை புனரமைக்கப்பட்டன. மேலும், கோவில் எதிரில் உள்ள அரச மரத்தடியில், விநாயகர் சிலை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த ஜூன் 14ம் தேதி, கும்பாபிஷேக வழிபாட்டு சடங்குகள் துவங்கி, நேற்று நிறைவடைந்தன. தொடர்ந்து, காலையில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா சென்றார்.