பதிவு செய்த நாள்
17
ஜூன்
2024
11:06
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற, வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகள் கடந்த 14ம் தேதி எண்ணப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கமிஷனர் முருகானந்தம் முன்னிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை துணை கமிஷனர் ஹர்ஷினி, வனபத்ரகாளியம்மன் கோவில் தக்கார் மேனகா, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி ஆகியோர் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகளில் ஈடுபட்டனர். இப்பணியில் உடுமலையை சேர்ந்த, சேவர் கொடியோன் சேவை குழு நிர்வாகிகள் தலைமையில்,130 பேர், கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். தட்டு காணிக்கைகள் உண்டியல் எண்ணியதில், 16 லட்சத்து, 39 ஆயிரத்து, 41 ரூபாயும், பொது உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணியதில், 35 லட்சத்து, 56 ஆயிரத்து, 976 ரூபாய் என, மொத்தமாக, 51 லட்சத்து, 96 ஆயிரத்து, 17 ரூபாய் இருந்தது. மேலும், 191.860 கிராம் தங்கம், 269.100 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். உண்டியலில் இலங்கை நாட்டின் மத்திய வங்கி, 20 ரூபாய் மூன்று நோட்டுகளும், வியட்நாம் நாட்டு, 2000 என்ற ஒரு நோட்டும் இருந்தது குறிப்பிடத்தக்கது.