திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2024 04:06
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. புராதான சிறப்புமிக்க இக்கோயில் குடைவரை முறையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பிரம்மோற்சவ தேரோட்ட திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவ திருவிழா ஜூன் 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு சேமம், கருடன், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் எழுந்தருளி நான்கு ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். தொடர்ந்து ஜூன் 21ல் இரவு கருட சேவையும், ஜூன் 23ல் இரவு சயன சேவையும் நடந்தது. இந்நிலையில் இன்று தேரோட்டம் நடந்தது. முன்னதாக தேரில் நின்றநாராயணப்பெருமாள் செங்கமலத்தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவகாசி, திருத்தங்கல் சுற்று பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமிகள் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி சென்றனர். சமூக ஆர்வலர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ததியாராதனை டிரஸ்ட், நிர்வாகத்தினர் செய்தனர்.