பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
10:07
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா ஜூலை 13 கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த, சவுந்தர வள்ளி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மதுரை அழகர் கோவிலை போன்று, ஆடி பிரம்மோற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி ஜூலை 12 இரவு 7:00 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தி நடக்கிறது. ஜூலை 13 காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் கோயில் கொடி மரத்தில் கருடகொடி ஏற்றப்பட்டு விழா துவங்கும். அன்று மாலை பெருமாள் மோகினி அவதாரத்தில் அன்ன வாகனத்திலும், தினமும் காலை, மாலை சிம்மாசனம், சிம்ம, சேஷ, அனுமன் வாகனங்களில் வீதி உலா வருவார். ஜூலை 16 கருட வாகனத்தில் பரமபதநாதனாக அலங்காரமாகிறார். ஜூலை 18 மாலை 6:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் மாப்பிள்ளை திருக்கோலத்தில் எழுந்தருளுவார். அன்று இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் இரவு பூப்பல்லக்கிலும், ஜூலை 20 காலை நவநீத கிருஷ்ணன் திருக்கோலத்திலும், இரவு வைகை ஆற்றில் குதிரை வாகனத்தில் அருள் பாலிக்கிறார். ஜூலை 21 காலை 9:00 மணிக்கு ஆடி தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ரத வீதிகளில் வலம் வருகிறார். தொடர்ந்து ஜூலை 22 காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் டிரஸ்டிகள் செய்துள்ளனர்.