பதிவு செய்த நாள்
01
ஜூலை
2024
10:07
புதுச்சேரி; புதுச்சேரியில் நடந்த ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண உற்சவ திட்டம், புதுச்சேரி ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் இணைந்து, 6வது முறையாக, புதுச்சேரியில் நேற்று மாலை ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவத்தை நடத்தியது. இதற்காக திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை, ஸ்ரீநிவாசா கல்யாண ரதத்தில், புதுச்சேரி வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சுவாமிக்கு, புதுச்சேரி எல்லை, மொரட்டண்டி டோல்கேட்டில், ஸ்ரீவாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் தலைவர் அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் டிரஸ்ட் இணை தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமையில், மங்கள வாத்தியங்கள் முழங்க, வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எழுந்தருளி, கல்யாண ரதத்தில் காட்சியளித்த ஸ்ரீநிவாச பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8:00 மணி வரை, பள்ளி கலையரங்கில், ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை சுப்ரபாதம் மற்றும் தோமாலை சேவை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து லாஸ்பேட்டை விமான நிலையம் எதிரே உள்ள ஹெலிபேடு மைதானத்தில், நேற்று மாலை 4:15 மணி முதல் இரவு 9:00 மணி வரை திருக்கல்யாண வைபவம் நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன், டிரஸ்ட் இணை தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கினர். சிவசங்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.