பதிவு செய்த நாள்
12
ஜூலை
2024
10:07
மயிலாடுதுறை; பஞ்சாக்கை அக்னிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பஞ்சாக்கை கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற அக்னிபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பஞ்சாக்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கற்பகாம்பிகை சமேத அக்னிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார நால்வர்களில் திருநாவுக்கரசரின் வைப்புத்தலமான இக்கோவிலில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானங்களின் ஜென்ம நட்சத்திர திருநாளில் வழிபாடு செய்யும் சிறப்புக்கு உரியது. கோவிலில் சுவாமி,, அம்பிகையை வழிபட்டால் தீமைகள், சத்ரு உபாதைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும், நீண்ட ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்து இருந்தது. தர்மபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் உத்தரவின் பேரில் கோவில்கள் முழுமையாக திருப்பணி செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7ம் தேதி பூர்வாங்க பூஜைகள், 9ம் தேதி முதல் கால பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணஹூதி மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. காலை 5:30, மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு ராஜகோபுரம், விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், கொடிமரம், தட்சிணாமூர்த்தி சன்னதி விமானங்களை அடைந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, மங்கல வாத்தியங்கள் இசைக்க தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் சரியாக காலை 6 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர் அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் சூரியனார் கோவில் சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், நாச்சியார் கோவில் ஆதீனம் குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவசுப்ரமணிய தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை திருக்கல்யாணமும் அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா காட்சியும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை தருமபுரம் ஆதீன சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். தருமபுரம் ஆதீனம் வேத சிவாகம பாடசாலை, தேவார பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் வேத பாராயணம் மற்றும் திருமுறை பாராயணம் செய்து வைத்தனர். கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேக ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி தலைமையிலானோர் செய்திருந்தனர்.