பதிவு செய்த நாள்
25
ஜூலை
2024
05:07
உடுமலை; திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலை பகுதிகளில், நேற்று கன மழை பெய்ததால், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதே போல், மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. காட்டாறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. சுற்றுப்பிரகாரம், கன்னிமார் கோவில் வரை நீர் ஓடி வருவதால், பாதுகாப்பு கருதி, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. மும்மூர்த்திகளுக்கு வழக்கமாக பூஜைகள் செய்யப்பட்டு, நடை சாத்தப்பட்டது. அதே போல், மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கும் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து, கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், திருமூர்த்திமலைக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். விநாயர், சுப்ரமணியர் கோவிலில் வழக்கமான பூஜைகளுடன், பக்தர்கள் சுவாமிகளை தரிசனம் செய்தனர். அதிகாரிகள் கூறுகையில், ‘இரு நாட்களாக மலைப்பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருகிறது. மழை குறைந்து, வெள்ள நீர் வடிந்ததும், கோவில் துாய்மை செய்யப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்’ என்றனர்.