பதிவு செய்த நாள்
27
ஜூலை
2024
12:07
கோவை புறநகரில் ஆடி வெள்ளியையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் காய்கறி அலங்காரத்திலும், வீரபாண்டி மாரியம்மன் மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வண்ணாங் கோவில் பட்டத்தரசி அம்மன், நரசிம்மநாயக்கன்பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு மாரியம்மன், உருமண்டம்பாளையம் பண்ணாரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் உள்ள பவுர்ணமி குழு சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.- சூலூர் வட்டார அம்மன் கோவில்களில், இரண்டாவது ஆடி வெள்ளி அலங்கார பூஜை பக்தி பரவசத்துடன் நடந்தது. சூலூர் அடுத்த ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், பொன்னாண்டாம்பாளையம் அங்காளம்மன் கோவில், கணியூர் மாரியம்மன் கோவில், அப்பநாயக்கன் பட்டி சக்தி மாரியம்மன், செங்கத்துறை மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில், பல்வேறு வகையான திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். அனைத்து கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமை பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அன்னூர் அருகே பொன்னாண்டாம்பாளையத்தில், மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் ஊற்றப்பட்டது. அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள அருந்தவ செல்வி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு அபிஷேக பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுநடந்தது. ஏராளமானபெண்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.