அம்மனுக்கு ஆடிப்பணியாரம்; சீலைக்காரியம்மனுக்கு படையல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2024 10:07
உசிலம்பட்டி; உசிலம்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் ஆடி மாதத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். குலதெய்வ வழிபாட்டுக்காக ஆடிமாதத்தின் சிறப்பாக நடு ஆடிக்கு சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையல் வைத்து வழிபாடு நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதி கிராமங்களில் ஆடிமாதத்தை தலையாடி, நடு ஆடி, கடைசி ஆடி என பிரித்து விழாவாகக் கொண்டாடுகின்றனர். புது மணத் தம்பதியர்கள் ஆடி மாதத்தில் பிரித்து வைக்கும் நிகழ்வு, ஆடி 18 ல், பதினெட்டாம் பெருக்கு என நிலங்களில் விதைநடவு செய்தல் என விவசாயம் சார்ந்த பணிகள் நடக்கும் மாதமாக கொண்டாடுகின்றனர். விவசாய பணிகளை செய்ய உடலுக்கு வலு சேர்க்கும் விதமாக மூன்று ஆடிகளிலும் அசைவ உணவு சமைக்கும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. உசிலம்பட்டி அருகே உள்ள ஆனையூர் கிராமத்தில் சீலைக்காரி அம்மனுக்கு நடு ஆடி தினத்தில் பணியாரம் படையலிட்டு வணங்கும் வழக்கமும் தொடர்கிறது. இதற்காக நேற்று சீலைக்காரியம்மன் கோயில் முன்பாக பணியாரம் சுடும் பணியில் ஈடுபட்டனர். முத்துலட்சுமி, ஆனையூர்: காலம் காலமாக நடுஆடிக்கு முதல் நாள் இரவு சீலைக்காரியம்மனுக்கு பணியாரம் படையலிட்டு வழிபாடு நடத்துவோம். இரவில் படையலிட்டு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உண்ண கொடுப்போம். தை மாத பிறப்பில் கருப்பட்டி படையல், சித்திரையில் பொங்கல் வைத்து படையல் என பாரம்பரியமாக சீலைக்காரியம்மனை வழிபட்டு வருகிறோம் என்றார்.