தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் ஆவணி திருவிழா ஆகஸ்ட் 24 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும் அம்பாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 5ம் திருவிழாவன்று இரவு குடவரைவாயில் தீபாராதனையும், 7ம் திருவிழா அன்று காலை சண்முகர் வள்ளி தெய்வானையுடன் வெட்டிவேர் சப்பரத்திலும், மாலையில் சிவப்பு சாத்தி கோலத்திலும், 8ம் திருவிழா நண்பகல் பச்சை சாத்திக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான 10ம் திருவிழாவில் இன்று தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், தொடர்ந்து உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டு வீதி உலா வந்து நிலையம் வந்தடைந்தது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது. தொடர்ந்து வள்ளியம்மன் தேர் இழுக்கப்பட்டது தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், அறங்காவலர்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.