திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2024 10:09
திருநெல்வேலி; நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்திற்காக கொடிபட்டம் கோயில் உட்பிரகாரத்தில் வீதியுலாவாக எடுத்து வரப்பட்டது. கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. திருவிழாவின் 11 நாட்களும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. 4ம் நாள் திருவிழாவில் பஞ்சமூர்த்திகளுடன் நெல்லையப்பர் திருவீதியுலா நடக்கிறது. 10ம் நாள் திருநாளில் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் செல்லையா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அறங்காவலர்கள் செய்துள்ளனர்.