பதிவு செய்த நாள்
03
செப்
2024
10:09
திருநெல்வேலி; புரட்டாசி மாத நவராத்திரி விழாவிற்காக பாளை 12 அம்மன் கோயில்களில் கால்நாட்டு வைபவம் கோலாகலமாக நடந்தது. மைசூர் தசரா, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு அடுத்த படியாக பாளை., தசரா திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தசரா திருவிழா அக்.2ம் தேதி அமாவாசை அன்று பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதை முன்னிட்டு பாளையிலுள்ள 12 அம்மன் கோயில்களில் நேற்று கால்நாட்டு வைபவம் நடந்தது. பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் நேற்று காலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆயிரத்தம்மனுக்கு தீபாராதனை நடந்தது. கால்கோள் விழாவிற்கான கொடிகம்பு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு திரிசூலம் பொறித்த கொடி மேளதாளம் முழங்க 8 ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து ஈசானியத்தில் கம்பத்திற்கு மஞ்சள் நீர். நெல் போன்றவை இடப்பட்டு, கால்கோள் விழா நடந்தது. கொடிகம்பத்திற்கும், மூலவர் அம்பாளுக்கும் தீபாராதனை நடந்தது. நேற்று முதல் தசரா முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளது. தசரா விழாவிற்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கவும், பந்தல் போடுவது, 41 நாட்கள்விரதம் இருப்பது, சப்பரங்களை சுத்தம் செய்வது ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறும். பாளை துாத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினிமாகாளி அம்மன், வடக்கு உச்சினி மாகாளி அம்மன், விஸ்வகர்மா உச்சினிமாகாளி அம்மன், புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்ணார்பேட்டை பேராத்துச் செல்வி அம்மன் கோயில்களிலும் கால்நாட்டு வைபவம் நடந்தது. அக். 12ம் தேதி விஜயதசமி அன்று 12 அம்பாள் திருவீதியுலாவும், மகிஷாசூர சம்ஹாரமும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.