பதிவு செய்த நாள்
03
செப்
2024
11:09
பல்லடம்; அமாவாசையை முன்னிட்டு, பல்லடம் பிரத்யங்கிரா தேவி கோவிலில் நடந்த நிக்கும்பலா யாகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், ஆவணி மாத அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நேற்று நடந்தன. முன்னதாக, நேற்று முன்தினம், அமாவாசையை முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. இதையடுத்து, நேற்று காலை, எதிரிகள் தொல்லை நீங்கி, கடன்களை தீர்த்து, திருமண, குழந்தை பாக்கியம், தொழில் வியாபார அபிவிருத்தி தரும் பிரத்தியங்கிரா தேவியின் நிகும்பலா யாகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் யாகத்தில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், சித்தம்பலம் நவகிரக கோட்டையில் நடந்த அமாவாசை வழிபாட்டில், மஹா மிருத்யுஞ்ஜய வேள்வி வழிபாடு நடந்தது. 108 கலச தீர்த்தங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு, நவகிரகங்கள் மற்றும் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடந்தது. கோவை காமாட்சிபுரம் ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர், சிறப்பு வேள்வி வழிபாட்டை துவக்கி வைத்தார். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள் பாலித்தார். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.