பதிவு செய்த நாள்
11
செப்
2024
04:09
திருப்போரூர்; குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பார் என, முருகப் பெருமானை கவுரவிப்பர். ஆனால், திருப்போரூரில் இருக்கும் குன்றில், கந்தசுவாமிக்கு பதில், அவரின் தந்தையான கைலாசநாதர்-, பாலாம்பிகை அம்மனுடன் கோவில் கொண்டுள்ளார். இந்த பிரணவமலையில் உள்ள கைலாசநாதர் கோவில், சங்ககால பழமையான கோவிலாக கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இக்கோவில், கந்தசுவாமி கோவிலின் துணைக்கோவிலாக உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, இவ்வூர் உபயதாரர் வாயிலாக கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காவும், சமூக விரோத செயலை தடுக்கும் வகையிலும், மலைக்கோவிலை சுற்றிலும் இரும்பு கம்பி வலை அமைக்க வேண்டும். நுழைவாயில் பகுதியில் கேட் அமைத்து, பாதுகாவலர் நியமிக்க வேண்டும். அதேபோல், பக்தர்களின் நலனை கருதி, கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் நீண்டகாலமாக உள்ளது. எனவே, அறநிலையத் துறையினர், இக்கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.