பதிவு செய்த நாள்
14
செப்
2024
05:09
ஊத்துக்கோட்டை; திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையில் பவானியம்மன் சுயம்பு வடிவாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இங்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வர். இங்கு நடைபெறும் விழாக்களில், ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் சிறப்பு பூஜை நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
கடந்த, 2022 -– 23 ஹிந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின் போது, பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு, தங்கத்தேர் உருவாக்கப்படும் என ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி 15 அடி உயரம், 5 அடி அகலத்தில் 8.5 கோடி ரூபாயில் தங்கத்தேர் செய்து முடிக்கப்பட்டு வெள்ளோட்ட நிகழ்வு இன்று காலை கோவில் வளாகத்தில் நடந்தது. அமைச்சர் சேகர்பாபு, கைத்தறி மற்றும் துணிநுால்துறை அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி தி.மு.க., – எம்.எல்.ஏ.க்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், ஆ.கிருஷ்ணசாமி, பொன்னேரி காங்., – எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகர், பரம்பரை அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா மற்றும் ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பவானியம்மன் கோவிலில் செய்யப்பட்டுள்ள தங்கத்தேர் ஒவ்வொரு பவுர்ணமி நாளன்று கோவில் உள் புறப்பாடு நிகழ்வில் பயன்படுத்தப்படும். உயரதிகாரிகளிடம் ஆலோசனை செய்து, எந்தெந்த நாட்களில் தங்கத்தேர் பவனி வரும் என்பது பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார்.