பதிவு செய்த நாள்
22
செப்
2024
10:09
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் துவக்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஸ்தலசயன பெருமாளின் தாயாராக அருள்பாலிக்கும் நிலமங்கைக்கு, 10 நாட்கள் பங்குனி உத்திரம், ஒன்பது நாட்கள் நவராத்திரி ஆகிய உற்சவங்கள் நடத்தப்படும். மேலும், மகப்பேறு வேண்டி, புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை நாட்களிலும், உற்சவம் நடத்துவர். புரட்டாசி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம், உபயதாரர் வாயிலாக, மாலை திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இரவு, அலங்கார தாயார் கோவிலுக்குள் உலா சென்று அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
பஜனை உலா: மாமல்லபுரம், நவநீதகிருஷ்ண சுவாமி கோவில் பஜனை குழுவினர், மார்கழி மாதம் முழுவதும் மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், பஜனை பாடி உலா செல்வர்.புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று காலை, பஜனை குழுவினர், கோவிலிலிருந்து புறப்பட்டு, பஜனை பாடல்கள் பாடி, உலா சென்றனர்.
திருப்போரூர்; திருப்போரூர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லிக்குப்பம் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, அம்புஜவல்லி உடனுறை ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. பெருமாளுக்கு மலர்களால் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. நெல்லிக்குப்பம் வேண்டவராசி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில், திருப்போரூர் அய்யப்பன் கோவில் வளாகத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிகளிலும் சிறப்புதிருமஞ்னம் நடந்தது.