பதிவு செய்த நாள்
22
செப்
2024
10:09
அன்னூர்; கோவை அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வழிபட்டனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அடுத்து உள்ள மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் 400 ஆண்டுகள் பழமையானது. திருப்பதி கோவிலை போலவே, இக்கோவிலும், ஏழு குன்றுகளுக்கு அடுத்து அமைந்துள்ளது. மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதர, வெங்கடேச பெருமாளுக்கு மகாபிஷேகம், திருமஞ்சனம் நடந்தது. இதையடுத்து, கோவில் வளாகத்தில், காலை 10:00 மணிக்கு, பசூர் மற்றும் பகத்தூர் பஜனை குழுவின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. கோவில் முன்புறம் நூற்றுக்கும் மேற்பட்ட தாசர்கள் சங்கு, சேகண்டியுடன் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷம் எழுப்பினர். பக்தர்கள் பலர் தாசர்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறிகளை படைத்து வழிபட்டனர். கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர், கோவை மற்றும் புளியம்பட்டியில் இருந்து, மொண்டி பாளையம் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வருகிற 28ம் தேதி காலை 4:00 மணிக்கு மகாபிஷேகமும், காலை 10:00 மணிக்கு, பஜனையும் நடக்கிறது.