பதிவு செய்த நாள்
23
செப்
2024
11:09
சென்னை; திருப்பதி பிரசாதத்தின் தரம் குறைந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் நடைமுறை, பழங்காலத்தில் இருந்தாக கல்வெட்டுகளில் தகவல்கள் உள்ளன.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்படும் லட்டுகளில், விலங்கின் கொழுப்பு சேர்த்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார். சர்ச்சையான இந்த கருத்தால், நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள், ஏற்கனவே நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதேனும் கல்வெட்டுகளில் உள்ளனவா என, அக்கோவில் கல்வெட்டுகளை படியெடுத்த, மத்திய தொல்லியல் துறையின் மைசூரு பிரிவு கல்வெட்டு துறை இயக்குனர் முனிரத்தினத்திடம் கேட்டோம்.
அவர் கூறியதாவது: திருப்பதி திருமலை கோவிலில், 8 முதல் 18ம் நுாற்றாண்டு வரை பொறிக்கப்பட்ட, 1,150க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அதில், ஆனந்த நிலையத்தில் உள்ள கல்வெட்டுகளில், 100ஐ மட்டுமே நான் படியெடுத்தேன். அவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னட மன்னர்கள், அரசியர், செல்வந்தர்கள், திருமலை கோவிலுக்கு வழங்கிய நன்கொடைகள் குறித்த தகவல்களே அதிகம் உள்ளன. முக்கியமாக, மன்னர்கள் தங்களின் பிறந்த நாளன்று, திருப்பதி திருமலை கோவிலில் பூஜை செய்ய சொல்லும் போது, பெருமாளுக்கு படைக்கும் உணவு பொருட்கள் தயாரிக்கும் முறை, அதில் சேர்க்க வேண்டிய இடுபொருட்கள், அவற்றின் அளவு குறித்து, கல்வெட்டுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. கடவுளுக்கு படைக்கும் உணவு பொருட்களை பக்தர்களுக்கும் வழங்குவதற்காக, குள்ளி, பணம், வராகன், கத்யாணம் என, பல வகைகளில் தங்கமாகவும், நிலமாகவும், பணமாகவும், தானம் வழங்கி உள்ளனர். பல்லவ ராணி காணவன் பெருந்தேவி, 4,176 தங்க காசுகளை வழங்கி உள்ளார்.
கிருஷ்ணதேவராயர் தன் அரசியரான திருமலாதேவி, சின்னதேவியுடன் கோவிலில் ஏழு முறை வலம் வந்து, ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அப்போது, அன்னதானம் வழங்க, தங்க பாத்திரங்களை வழங்கி உள்ளனர். இதற்கு ஆதாரமான கல்வெட்டுகளும் உள்ளன. பிரசாதங்களை தயாரிக்கும் சமையலறையின் சுத்தத்தையும், உணவு பொருட்களின் தரத்தையும், உணவு தயாரிப்போர் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்களையும், கண்காணிப்பாளர்கள் தொடர்ந்து கவனித்துள்ளனர். சமையலர்களோ, அர்ச்சகர்களோ தவறு செய்தால், அவர்களுக்கு கடும் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒருமுறை, கோவில் நகைகளில் முறைகேடு செய்தவரும், உணவு தயாரிப்பில் முறைகேடு செய்தவரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களின் தலைமுறையினர், ஏழுமலையான் கோவில் தொடர்பான பணிகளில் இருந்து நிரந்தரமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இது, சமூக அந்தஸ்திலிருந்து ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தண்டனையாக அந்தக் காலத்தில் கருதப்பட்டது. இதுபோன்ற, பல கல்வெட்டுகள் உள்ளன. இவ்வாறு முனிரத்தினம் கூறினார்.