பதிவு செய்த நாள்
23
செப்
2024
11:09
அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், வஜ்ரகிரி மலை உள்ளது. இந்த மலையின் மீது, பழமையான மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், சிவஜோதி ருத்ரசேனா குழுவினர் வாயிலாக, 27 அடி உயர திரிசூலம் பிரதிஷ்டை செய்வதற்கான பூஜை, நேற்று நடந்தது. திரிசூல சிவசக்தி சங்கமம் குழுவினர் சார்பில், திருவாசகம் முற்றோதுதல் திருவிழா நடந்தது. மாணிக்கவாசகரின் திருவாசகம் பாடல்கள் முற்றோதுதல் நிகழ்ச்சி, திருக்கழுக்குன்றம் சிவனடியார் சிவதாமோதரன் தலைமையில் நடந்தது. நிறுவப்பட்ட 27 அடி உயர திரிசூலம், வாகனம் வாயிலாக, 7 நாட்கள், சென்னை மீஞ்சூர், காளஹஸ்தி, ராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, சமயபுரம், மயிலாப்பூர், திருவேற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜை செய்யப்படுகிறது. பின், அச்சிறுபாக்கம் கொண்டுவரப்பட்டு, வஜ்ரகிரி மலையின் மீது, மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் எதிரே பிரதிஷ்டை செய்யப்படும் என, சிவஜோதி ருத்ரசேனா குழுவினர் தெரிவித்தனர். இவ்விழாவில், ஹிந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், மக்கள் பிரதிநிதிகள், சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.