பதிவு செய்த நாள்
27
செப்
2024
05:09
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் தெரிவிக்கப்பட்டது. முருகப்பெருமானுக்கு, 108 வேல் வழிபாட்டுப் பெருவிழா, திருவேல் வழிபாட்டு பேரவை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், பல்லடம் ரோடு, கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கவுமாரமடம் சிரவை ஆதீனம் ராமனாந்த குமரகுருபர சுவாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, பாலமுருகனடிமை சுவாமி, முத்துசிவராம சுவாமி அடிகளார், முத்துசிவராமி சுவாமி, ராமனாந்த மகராஜ், அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, 108 சக்திபீடம் காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்படி, 108 வேல்களைக் கொண்டு, கணபதி வேள்வி, மூலவர் அபிஷேகம், திருப்புகழ் பாராயணம், கலச பூஜை, 108 திருவேல் பூஜை உள்ளிட்டவை நடந்தது. விழாவில், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருவேல் வழிபாட்டுப் பேரவை செய்து வருகிறது. அதன்படி, முருகனின் மறு ரூபமான வேலின் வழிபாட்டு முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லப்படுகிறது. வீட்டில் ‘வேல்’ வைத்து வணங்கினால் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கும். சுகப்பிரசவம், குழந்தைபேறு, வம்சவிருத்தி உண்டாகும். செய்யும் தொழிலில் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில் மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகி நன்மை உண்டாகும். இளைஞர்கள் கல்வியில் மேன்மையும், உயர்வும், வேலைவாய்ப்பும் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.