பதிவு செய்த நாள்
28
செப்
2024
10:09
பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி பெருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னதாக, ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோவிலில் இருந்து, தமிழகத்தின் குருமஹா சந்நிதானங்கள், ஆதீனகர்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் ஊர்வலமாக ஆழியாறு ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கு, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும் ஆழியாறு தாய்க்கு நன்றி தெரிவித்து ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, ஆசி வழங்கினர். தமிழ்நாடு அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக்குழு உறுப்பினர் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சந்நிதானங்கள் சிரவை ஆதீனம் கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், ஆனைமலை ஆர்ஷய வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ், ஸ்ரீ வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், துறவியர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அகில பாரத சந்நியாசிகள் சங்கம், ஆர்ஷ வித்யா பீடம், மஹாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்திருந்தனர். ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது, குப்பையை கொட்டக்கூடாது, இறந்த விலங்குகளை வீசக்கூடாது, நீரின் புனிதம் காக்க வேண்டும் என உறுதி எடுக்க வேண்டும், ஆண்டு தோறும் பவுர்ணமி நாளில், ஆரத்தி விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.