வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி சக்தி கொலு; 3ம் தேதி கோலாகல துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2024 11:10
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா வரும், 3ம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது.
சென்னை நகரில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக, வடபழனி ஆண்டவர் கோவில் விளங்குகிறது. இத்தலம் சாதுக்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இக்கோவிலில் முருகப்பெருமான் பாத ரட்சையுடன் அருள்பாலிக்கிறார். பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள், இங்கு வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விழா வரும்,3ம் தேதி முதல் அக்., 12ம் தேதி வரை, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் பிரம்மாண்ட கொலு வைக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும், 3ம் தேதி மாலை யாகசாலை பூஜைகள் துவங்கி தினமும் காலை, மாலை இருவேளையும் பூஜைகள் நடத்தப்பட்டு, அக்.,12ம் தேதி உச்சிகாலத்துடன் பூர்த்தியாகிறது. அம்மன் கொலு சன்னதியில் காலை 11:00 மணி முதல் 11:30 மணிவரை, மாலை 6:00 மணி முதல் 6:30 மணிவரை சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்படுகிறது. நவராத்திரி பத்து நாளில் தினமும் மாலை, 5:00 முதல் 7:00 மணிவரை லலிதா சகஸ்ரநாம, வேத, திருமுறை பாராயணங்கள், மகளிர் கொலு பாட்டு நடக்கிறது. வரும், 4ம் தேதி மாலை 4:15 மணிக்கு மகளிரின் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. அக்.,6ம் தேதி திருமுறை பாராயணம் மாலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது.
ஏகதின லட்சார்ச்சனை; மீனாட்சி அம்மன் உற்சவருக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்., 11ம் தேதி காலை 7:30 மணிக்கு துவங்கி மதியம் 12:30 மணிவரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணிவரையும் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு, 250 ரூபாயினை அலுவலகத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். லட்சார்ச்சனை முடிவில் அம்பாளின் பிரசாதம் வழங்கப்படும்.
வித்யாரம்பம் நிகழ்ச்சி; நவராத்திரியின் நிறைவு பகுதியாக அக்.,12ம் தேதி, விஜயதசமி அன்று வித்யாரம்பம் எனும் நிகழ்ச்சி காலை 7:00 மணி முதல் நண்பகல், 12:00 மணிவரை நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழுந்தைகளின் விரல் பிடித்து, தொடக்க கல்வியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
நாட்டிய, சொற்பொழிவு: நவராத்தி கொலுவின் ஒவ்வொரு நாளும் மாலை 6:00 மணி முதல் 7:00 மணிவரை நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணி முதல் 8:30 மணிவரை சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. சக்தி கொலுவினை பக்தர்கள் காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணிவரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் பார்வையிடலாம். கொலுவில் உற்சவர் அம்மனுக்கு அந்தந்த நாளுக்கு உரிய சிறப்பு அலங்காரம் செய்து, வழிபாடு நடத்தப்படும். கொலுவில் அம்மனை தரிசித்து வரும் பக்தர்களுக்கு தினமும் பிரசாதம் வழங்கப்படுகிறது. கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி வினா நடத்தப்படும். அதில்,பங்கேற்பவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்படும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.