பதிவு செய்த நாள்
04
அக்
2024
02:10
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழா, ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கை, அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் வணங்கி வழிபாடு செய்யப்படுகிறது.
முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. கோவில்கள் மற்றும் வீடுகளில், பொம்மைகள் மற்றும் தெய்வ விக்ரஹகங்களை கொண்டு, கொலு அமைத்து, தினமும் பதார்த்தங்கள் படைத்தும், பஜனை பாடல்கள் பாடியும் மக்கள் வழிபடுகின்றனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில், ஐயப்பன் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், நவராத்திரி விழா, சிறப்பு பூஜைகளுடன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். குள்ளக்காபாளையத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவம் நடக்கிறது. நேற்று, மூத்த கணபதி வழிபாடு, ஊர்க்காவல் தெய்வங்களான கருப்பராயன், கன்னிமார் திருக்கோவிலில் ஆரம்ப சிறப்பு பூஜை நடந்தது. மாலையில், தீர்த்த கலசம் கொண்டு வருதலுடன் நவராத்திரி கொலு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
இன்று, திருவிளக்கு பூஜை நடக்கிறது. வரும், 12ம் தேதி ராகு தீபம் கொண்டு வருதல், மாவிளக்கு பூஜை, தேவாங்க வீரகுமார்களின் அலகு சேவையுடன் திருமஞ்சனம் கொண்டு வருதல், அம்மனுக்கு பஞ்சாபிேஷகம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 13ம் தேதி, அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல், அம்மன் கோவில் வந்தடைந்து மகா அபிேஷகம், பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. 14ம் தேதி, பக்த ஜனேஸ்வரருக்கும், மனோன்மணி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் மற்றும் அன்னதானம், ஊஞ்சல் உற்வசத்துடன், நவராத்தி விழா நிறைவடைகிறது. நவராத்திரி நாட்களில் தினமும் காலை, 6:00 மணிக்கு விஸ்வரூபம், பாலமுது; மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜை, திருவமுது; மாலை, 6:00 மணிக்கு சாயரட்சை, இரவு, 9:00 மணிக்கு திருக்கண்ணமுது, அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவில் நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி அம்மனை மகிழ்வித்தனர். வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவில், வாழைத்தோட்டம் காமாட்சியம்மன் கோவில்களில் நேற்று கொலு வைக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், நவராத்திரி கொலு சிறப்பு பூஜை இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. நாள்தோறும் காலை, 10:00 மணிக்கு தாயார் திருமஞ்சனம் நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமிகளின் உள்புறப்பாடு இடம்பெறுகிறது. தொடர்ந்து மாலை, 7:30 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. முதல் நாள் சைலபுத்திரி அலங்காரம், தொடர்ந்து, பிரம்மசாரனி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கார்த்தியாயினி, கால்ராத்திரி, மகாகவுரி, ஒன்பதாம் நாள் சித்திதாத்திரி அலங்காரத்திலும் சிறப்பு பூஜை நடக்கிறது. ஒவ்வொரு நாளும், கொலு சிறப்பு பூஜையையொட்டி பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பரதநாட்டியம், கலைவிழா, கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.