பதிவு செய்த நாள்
09
அக்
2024
10:10
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஆறாவது நாள் விழாவான நேற்று முன்தினம் காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. சக்தி கொலுவை, நேற்று மாலை சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, காவல்துறையின் மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி.,செந்தில் குமாரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் வடபழனி ஆண்டவர் கோவில் உபயதாரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சக்தி கொலுவில், கருமாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அம்பாள் அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு, மாலை சாய்முத்ரா டான்ஸ் அகாடமி மாணவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இரவு, பாரதி பாஸ்கரின் சொற்பொழிவு நடந்தது.
கொலுவில் பங்கேற்கலாம்; பக்தர்கள் சக்தி கொலுவில் தங்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில், அவரவர் வசதிக்கேற்ப பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். அதேபோல, அம்மனை நினைத்து வேண்டுதல் வைத்து நிறைவேற்றக் கோரி சக்தி கொலுவில் பொம்மைகள் வாங்கிக் கொடுத்து அம்பாளின் அருளைப் பெறலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.