பதிவு செய்த நாள்
23
நவ
2012
10:11
கும்பகோணம்: கும்பகோணம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில், சுவாமிமலை, சுவாமிநாத ஸ்வாமி கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவுக்கு, செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, தஞ்சை கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது: சுவாமிநாத ஸ்வாமி கோவிலில், நவம்பர், 27ம் தேதி நடக்கும் திருக்கார்த்திகை விழாவுக்கு, இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலில், திருவையாறு, கும்பகோணம் மார்க்கங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்துவதுக்கு இடம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சுவாமிமலையில் அணுகுசாலைகள் சரிவர இல்லை. அவற்றை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும். சிறப்பு தரிசன வசதிகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும். கும்பகோணம் நகராட்சி சார்பில் கூடுதலாக சப்ளை செய்ய வேண்டும்.
தூய்மை பணிக்கு சுற்று வட்டாரத்தில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இருந்து தலா, இருவர் வீதம் சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணியாற்ற வேண்டும். உணவு, குடிநீர் வழங்குவதை முறைப்படுத்தவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் போலீஸ் துறை அனுமதிக்கும் குறிப்பிட்ட மூன்று இடங்களில் மட்டும் வழங்க வேண்டும். தீயணைப்புத் துறை முதல் நாளில் இருந்தே முகாமிட்டு, 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் மருத்துவ துறை சிறப்பு மருத்துவ முகாமிற்கான பூத் அமைத்து பணியாற்ற வேண்டும். ரெட்கிராஸ் சார்பில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் தேவையான மருந்துகளுடன் இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோயில் உள்ள இடங்களிலும், சிறப்பு பார்க்கிங் அமையவுள்ள இடங்களிலும், 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் தற்காலிக கழிவறைகளை அமைக்க வேண்டும். சுவாமிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் புதிதாக யாரும் கீற்று கொட்டகை போட அனுமதிக்க கூடாது. ஏற்கனவே உள்ள அனைத்து கீற்று கொட்டகைகளையும் உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிமலைக்கு வரும் அனைத்து சாலைகளையும் நெடுஞ்சாலை துறை உடனே சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கோவில் துணை கமிஷனர் கஜேந்திரன்,""திருக்கார்த்திகை திருவிழாவன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட உள்ளது. தெற்கு கோபுர வாசல் வழியே உள்ளே வந்து கிழக்கு கோபுர வாசல் வழியே பக்தர்கள் வெளியே செல்ல வேண்டும். கோவில் முழுவதும் கூட்டத்தை கண்காணிக்க தேவையான இடங்களில் சி.சி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது,என்றார். டி.ஆர்.ஓ சுரேஷ்குமார், ஆர்.டி.ஓ சங்கரநாராயணன், டி.எஸ்.பி சிவபாஸ்கர், தாசில்தார் மாதவன், கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமநாதன், நகராட்சித் தலைவர் ரத்னா, துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.