திருவாரூர்: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில், முக்கிய வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, 26ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின.
நேற்று காலை, 8:00 மணிக்கு, ஐந்தாம் கால பூஜை, பூர்ணாஹுதியை தொடர்ந்து, தீட்சிதர்கள், புனித நீரை ஊர்வலமாக எடுத்து வந்தனர். காலை, 9:15 மணிக்கு, ராஜகோபுரம் மற்றும் இதர கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
காலை, 9:30 மணிக்கு, ராஜகோபாலசுவாமி, செங்கமலத்தாயார் சன்னிதி விமானங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பின்,கோபுர கலசங்களுக்கு தீபாராதனை நடந்தது. இதில், காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்றார்.