பதிவு செய்த நாள்
19
அக்
2024
11:10
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான அகோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்திரி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில், சுத்த தீர்த்த புஷ்கரணி குளம் உள்ளது. இதில், ஆண்டுதோறும் மாசி மாதம் தெப்ப உற்சவம், ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறும். உற்சவர் பிரகலாதவரதர், அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வந்து உற்சவம் நடத்தப்படும். இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் பிளாஸ்டிக் குப்பை, மது பாட்டில்கள் நிறைந்து காணப்பட்டன. மேலும், கடந்த 2ம் தேதி மாஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தனர். அவர்கள், பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்த பூஜை பொருட்களை, பூஜைக்கு பின் படிக்கட்டுகளில் வீசி சென்றதால், அதிக அளவில் தண்ணீர் மாசடைந்து காணப்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் கடந்த 13ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில், பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இணைந்து, குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் தண்ணீரில் இருந்த அனைத்து குப்பை கழிவுகளும் அகற்றினர்.