பதிவு செய்த நாள்
21
அக்
2024
04:10
கூடுவாஞ்சேரி; கூடுவாஞ்சேரி, காந்தி தெருவில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை நடந்தது. அதற்கு முன்னதாக, காலை 6:00 மணிக்கு, கோமாதா பூஜை, விநாயகர் வழிபாடு, நான்காம் கால யாக பூஜைகள், யாக வேள்வி, மஹாலட்சுமி ஹோமம், நாடி சந்தானம், பூர்ணாஹுதி தீபாராதனை ஆகியவை நடந்தன. தொடர்ந்து, காலை 9:20 மணிக்கு, யாகசாலையில் இருந்து கலசம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 9:40 மணிக்கு கோவிலில் உள்ள கோபுரத்திற்கு, வேத மந்திரங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் புனித நீரை தெளித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில், அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.