சபரிமலை பக்தர்களுக்காக ஆன்லைன் ரேடியோ; தேவசம்போர்டு டெண்டர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 05:10
சபரிமலை; சபரிமலை பக்தர்களின் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆன்லைன் ரேடியோ அறிமுகம் செய்கிறது. இதற்காக தேவசம்போர்டு டெண்டர் கோரியுள்ளது.
சபரிமலையில் மண்டல காலம் அடுத்த மாதம் 16-ல் தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களின் வசதிக்காக இந்த ஆண்டு முதல் ஆன்லைன் ரேடியோ சேவையை தொடங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. ரேடியோ ஹரிவராசனம் என்ற பெயரில் இந்த ஆண்லைன் ரேடியோ இயங்கும். 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் இந்த ரேடியோவை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் கேட்கக்கூடிய அளவில் உருவாக்கப்படுகிறது. இதனுடைய தலைமை ஒலிபரப்பு நிலையம் சபரிமலையில் செயல்படும். இதில் சபரிமலை வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோயில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள், சபரிமலை வரலாறு பற்றிய சிறப்பு தொகுப்புகள் ஒலிபரப்பாகும். கோயில் மற்றும் அதன் பாரம்பரியம் தொடர்பான நேர்காணல் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு இதில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரேடியோ நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தேவசம்போர்டு கோரியுள்ளது. மண்டல சீசனுக்கு முன்னால் இது அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.