பதிவு செய்த நாள்
23
அக்
2024
11:10
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில், ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவிலில், கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், மெய்ப்பேடு என்ற மப்பேடில், சுந்தர சோழனின் மகனும், ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்த கரிகால சோழனால், 967ல் கட்டப்பட்டது, சிங்கீஸ்வரர் கோவில். இதே ஊரில் பிறந்தவர் அரியநாத முதலியார். இவர், மதுரை நாயக்கர்களின் தளவாயாக இருந்தவர். இவர், சிங்கீஸ்வரர் கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்டியதுடன், அதன் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக்கல்லால் ஆன கோவிலையும் புதுப்பித்து விரிவாக்கினார். விஜயநகர மன்னர்கள் காலத்தில், இந்த கோவில் வழிபாடு மற்றும் பூஜைகளுக்காக தானங்கள் வழங்கப்பட்டதுடன், தெலுங்கு பிராமணர்கள் பூஜை செய்வதற்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.
நில தானம்; இந்நிலையில், விஜயநகர மன்னர்களில் சிறந்தவராக கருதப்படும் கிருஷ்ண தேவராயர், இந்தக் கோவிலில் பணி செய்த பிராமணர்களுக்கு, நிலம் தானம் செய்துள்ளார். அதற்கு சான்றான செப்பேடு, தற்போது கோவிலில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல பிரிவு கல்வெட்டியல் துறை இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: சிங்கீஸ்வரர் கோவில் செப்பேடின் படத்தை, பவானி அம்மன் கோவில் செயல் அதிகாரி பிரகாஷ் எனக்கு அனுப்பினார். அதை படித்துப் பார்த்த போது, கோவிலில் பணிபுரிந்த பிராமணர்களுக்கு, கிருஷ்ணதேவராயர் நிலம் தானம் வழங்கிய தகவல் இருந்தது. இரண்டு செப்பு இதழ்கள், ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. வளையத்தில் கிருஷ்ணதேவராயரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேடில், சமஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. இது, சக ஆண்டு, 1435; ஸ்ரீமுக ஆண்டு, மார்கஷிரா மாதம், 12ம் தேதி, அதாவது, 1513ம் ஆண்டு டிசம்பர் 23ல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், வாசாலபடட்கா என்ற ஊர், கிருஷ்ணராயபுரம் என பெயர் மாற்றப்பட்டு தானம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு; இந்த ஊர், சந்திரகிரி ராஜ்யத்தில் உள்ள வாகிர நாட்டின் தோண்டிரா மண்டலத்தின் நர்முரு சிமாவில் உள்ளது. இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கில் வடமங்கலம், தெற்கில் திருமங்கலம், மேற்கில் சந்துாரு, வடக்கே திருமண்யா ஆகிய கிராமங்கள் இருந்துள்ளன. இந்த ஊர் பிராமணர்களான, கம்பம்பட்டி திப்பய்யாவின் மகன் அன்னய்யா, பிசபாட்டி ஒல்லயாவின் மகன் எல்லய்யா, கந்துகுரி சூரய்யாவின் மகன் சர்வாபட்டா, மன்னப்பள்ளி வல்லய்யாவின் மகன் தெலுங்கராயபட்டா உள்ளிட்டோருக்கு, நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். அப்போது, மேலும் பல தகவல்கள் வெளிவரலாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -