பதிவு செய்த நாள்
26
நவ
2012
10:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மதில்சுவரை, 37 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. மேலும், இரட்டை திருமாளிகையை புதுப்பிக்க, முதல் கட்டமாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.வரலாற்று புகழ் பெற்றதுகாஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமை வாய்ந்தது ஏகாம்பரநாதர் கோவில். கி.பி., நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நகரின் மையப்பகுதியில், 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலில், சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்து, ஏகாம்பரநாதரை வழிபட்டுள்ளனர்.மதில் சுவர் சீரமைப்புகோவில் ராஜகோபுரம் கிருஷ்ணதேவராய மன்னரால் கட்டப்பட்டது. ஒன்பது நிலைகள் கொண்டது. கோவில் ஐந்து பிரகாரங்களைக் கொண்டது. கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது நிதி பற்றாக்குறை காரணமாக சில பணிகள் விடுபட்டன.கோவிலின் வெளிப்புற மதில் சுவரில், சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. கற்கள் பெயர்ந்தன. அவற்றை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரினர். அதைத் தொடர்ந்து, வெளிப்புற மதில் சுவரை சீரமைக்க, கோவில் நிதியிலிருந்து 15 லட்சம் ரூபாய், புரவலர் திட்டத்திலிருந்து 22 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, மதில் சுவரை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இரட்டை திருமாளிகைகோவில் வளாகத்தில் உள்ள இரட்டை திருமாளிகையும் சிதிலமடைந்துள்ளது. இங்குமன்னர்கள் தங்கள் அமைச்சர்களுடன் அமர்ந்து, கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததாகக் கூறப்படுகிறது. இது பராமரிப்பின்றி சீரழிந்தது. இதை புதுப்பிக்க 2 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, முதற்கட்டமாக 13வது நிதி ஆணையத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறுகையில், ""கோவில் மதில் சுவர் 37 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படுகிறது. விரிசல் ஏற்பட்ட பகுதியில், ஒவ்வொரு கல்லையும் எடுத்து, பழமை மாறாமல் அப்படியே பொருத்துகிறோம். இரட்டை திருமாளிகை திருப்பணிக்கு முதல் கட்டமாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான சீரமைப்புப்பணி விரைவில் துவக்கப்படும், என்றார்.