கோவை வெள்ளியங்கிரி மலை கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் அனுமதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2024 11:12
சென்னை; ‘கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சிவன் கோவிலில், நவ., 28 முதல் ஜனவரி 14 வரை, நந்த பூஜை மற்றும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், முட்டத்துவயல் பகுதியை சேர்ந்த சி.ஈஸ்வரமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு: வெள்ளியங்கிரி மலையின் 7வது மலையில், வெள்ளியங்கிரி ஆண்டவரின் சுயம்புலிங்க கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை 13ம் தேதி முதல் மார்கழி 30 வரை, மகாதீபம் மற்றும் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி, வனத் துறை அனுமதியுடன் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு பூஜை, தீபம், திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு, அக்டோபர் 29ல் விண்ணப்பம் செய்தேன். ஆனால், அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, நான் அளித்த மனுவை பரிசீலித்து, செம்மேடு ஊர் பொது மக்கள் எதிர்காலத்துக்கு செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் சிறப்பு பிளீடர் சீனிவாசன் வாதாடியதாவது: ‘கடந்த நவ., 28 முதல், அடுத்தாண்டு ஜனவரி 14 வரை, வெள்ளியங்கிரி ஆண்டவரின் சுயம்புலிங்கத்துக்கு பூஜை செய்ய, செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. காலை 10:00 மணி முதல் 3:00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைக்கு ஆயுதங்கள் எடுத்து செல்லக் கூடாது; விலங்குகளை வேட்டையாடவோ அல்லது அவற்றுக்கு தீங்கு செய்யவோ கூடாது. வனப்பகுதிக்குள் தீ மூட்டவோ, கொப்பரைகளை வைத்து தீ மூட்டவோ கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதித்து, மாவட்ட வன அலுவலர் அனுமதி வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். வனத்துறை அனுமதி கடிதத்தையும் தாக்கல் செய்தார். இதற்கு மனுதாரர் தரப்பில், ‘காலை 10:00 மணி முதல் 3:00 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நேரத்துக்குள் மலையில் ஏறி, இறங்க முடியாது. கார்த்திகை மகாதீபம் ஏற்றவும் அனுமதிக்க வேண்டும்’ என, கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, ‘கடந்தாண்டை போல, இந்தாண்டு காலை 7:00 முதல் மாலை 4:00 வரை அனுமதி வழங்க வேண்டும். பெரிய அளவில் இல்லாமல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.