காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், நான்காவது சோமவார தினத்தன்று லட்சதீப திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி, நான்காவது சோமவாரமான நேற்று மாலை, லட்சதீப திருவிழா விமரிசையாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவில் பிரகாரத்தில் சிவலிங்கம், நட்சத்திரம், ஓம், ஸ்வஸ்திக் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கோலமிட்டு, அதில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டனர். லட்சதீப திருவிழாவையொட்டி, உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் மஹாதீப ஆராதனை நடந்தது. கோவில் நுழைவாயிலில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, கோவில் நுழைவாயில் பகுதியில், வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.