கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தேர் திருவிழா நேற்று துவக்கியது. கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஐந்தாம் சோமவாரத்தில் இருந்து மூன்று நாள் தேரோட்ட விழா நடப்பது வழக்கம். இந்த கோவில் தனியாருக்கு சொந்தமானது. கடந்த 2009ம் ஆண்டு ஹிந்து சமய அறநிலையத்துறை இந்த கோவிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுயன்றது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், கடந்த 2009ம் ஆண்டு முதல் தற்போது வரை மூன்று நாள் தேரோட்ட விழாவின் போது, கோவிலின் கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும். பூட்டிய கதவின் முன் பக்தர்கள், தங்களின் வேண்டுதலை, விளக்குகள் ஏற்றியும், உப்பு வைத்தும் வழிபடுகின்றனர். முதல் நாளான நேற்று, பக்தர்கள் வருகை அதிகரித்ததால், கோவிலின் முன் கயிறு கட்டப்பட்டிருந்தது. திருவிழாவையொட்டி, குழந்தைகளை கவரும் வகையில் பொம்மை கடைகள், இனிப்பு மற்றும் மிட்டாய் கடைகள் அமைக்கப்பட்டது. மேலும், ராட்டிணம் மற்றும் இதர விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.